Saturday, December 3, 2016

Pallikudamnews

சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்; பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் ஓரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தூய்மையாக சமைக்கவேண்டும்
* மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும்.
சமையலுக்குப் பயன்படுத்தப்படும் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் சமைக்கும் முன்னதாக தூய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
* சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் ஒவ்வொரு நாளும் சுத்தப்படுத்துதல்.
* உணவு தயார் செய்யும் சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்கப்படுதல் வேண்டும்.
* சமையலர், சமையல் உதவியாளர்கள் தூய்மையான முறையில் சமையல் செய்தல்.
* மாணவர்கள் உணவு அருந்தும் இடம் சுத்தமாக வைப்பதுடன் உணவு அருந்தும்போது பறவைகள், நாய்கள் அருகில் வராமல் இருக்க ஏற்பாடு செய்தல் வேண்டும்.
கெடாத முட்டை
* சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டை வழங்கப்படும் போது, முட்டை கெடாமல் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
* மதியம் உணவு இடைவேளை விடப்பட்டவுடன் மாணவ, மாணவியர்களை வரிசைப்படுத்தி உணவு வழங்க வேண்டும்.
* கொதி நிலையில் உள்ள சாம்பார், உணவு வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களின் அருகில் மாணவர்கள் சென்று விடாமல் இருக்க வேண்டும்.
* பள்ளியின் தலைமையாசிரியர் தலைமையில் உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் சுழற்சி அடிப்படையில் நாள்தோறும் இப்பணியினை கண்காணித்தல்.
கை கழுவ வேண்டும்
* மாணவர்கள் உணவு சாப்பிடும் முன்பாக தங்களின் கைகள், சாப்பாட்டு தட்டு, குடிநீர் குடிக்கும் டம்ளர் ஆகியவற்றை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.
* பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு அருகில் உள்ள கடைகளில் சுகாதாரமற்ற திண்பண்டங்களை வாங்கி உண்ணக்கூடாது.
தரமான உணவா?
* பள்ளி ஆண்டு விழா, சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா போன்ற நாட்களில் தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு போன்ற உணவு பொருட்கள் அளிக்கும் நிகழ்வுகளில் பள்ளிக்கு வெளியில் சமைத்து எடுத்து வரப்படும் உணவுப் பொருட்களின் தரத்தினை நன்கு சோதித்தப் பின்னரே பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
மேற்குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தங்கள் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் பின்பற்ற தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: