Saturday, December 3, 2016

Pallikudamnews CCE

தலைமையாசிரியர் ’கை’யை கடிக்கும் CCE Worksheet தேர்வுகள்!!!
      அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (சி.சி.இ.,) தேர்வுகள் நடத்த தலைமையாசிரியர்கள் தங்கள் சொந்த பணம் செலவிடுவதால் அதிருப்தியில் உள்ளனர்.

      தொடக்கக் கல்வி மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் சி.சி.இ., தேர்வுகள் நடத்த மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) உத்தரவிட்டுள்ளது. இதன்படி கடந்த இரண்டு வாரங்களாக திங்கள் - வெள்ளி மதியம் 3:00 மணிக்கு 1-8ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகின்றன. இன்னும் இரண்டு வாரம் நடக்கிறது.
இத்தேர்வுகளுக்கான வினாத்தாள் (ஒர்க்சீட்) எஸ்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதை பள்ளிகளில் ’டவுன்லோடு’ செய்து, ஒரு பள்ளியில் 500 மாணவர்கள் இருக்கும்பட்சத்தில் 500 நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். இதற்கான செலவை தலைமையாசிரியர்கள் ஏற்க உதவி கல்வி அலுவலர்கள் வற்புறுத்துவதால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:
வினாத்தாள் நான்கு பக்கம் உள்ளது. இதை நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க நாள் ஒன்றுக்கு 700 ரூபாய்க்கு மேல் ஒரு  தலைமையாசிரியர் செலவிட வேண்டியுள்ளது. தற்போது பணம் எடுக்க கட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் ஏ.டி.எம்.,ல் தினமும் 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடிகிறது.
இதில் குடும்ப செலவை பார்ப்பதா அல்லது நகலுக்கு செலவிடுவதா. சி.சி.இ., தேர்வு நடத்த உத்தரவிட்ட எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் இதற்கென தனியாக நிதி ஒதுக்க வேண்டும் அல்லது மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப வினாத்தாள் அனுப்ப வேண்டும். இதற்கு தலைமையாசிரியரை பலிகடா ஆக்கக்கூடாது. சில உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் இத்தொகை வசூலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது, என்றார்.

No comments: