Friday, December 2, 2016

Pallikudam News

ரேஷன் கார்டில் மீண்டும் உள்தாள் : ஆறு மாதம் நீட்டிக்க முடிவு
        ரேஷன் கார்டில், மீண்டும் உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

        தமிழகத்தில், நேற்றைய நிலவரப்படி, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், ஆண்டுதோறும், ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி, செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுக்கு பதில், இம்மாதத்துக்குள், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்தது.ஆனால், பலர், 'ஆதார்' விபரம் தராததால், அந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், வழக்கம் போல, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடையில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், ரேஷன் கார்டு எண், ஆதார் எண் பதிவு செய்யப்படுகிறது.எனவே, உள்தாள் ஒட்டாமல், அந்த எண்ணை பதிவு செய்து, பொருட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பொங்கலுக்கு, இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. இதற்காக, ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட வேண்டியுள்ளது. உள்தாளில், ஓராண்டு என குறிப்பிடாமல், ஆறு மாதங்களுக்கு என, இருக்கும். ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, ஆதார் விபரம் வாங்கும் பணி, 2017 ஜன., மாதம் முடிக்கப்படும். பிப்., முதல், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய குடும்பங்களுக்கு, ஸ்மார்டு கார்டு தரப்படும். அதற்குள், ஆதார் தராதவர்களுக்கு, தீவிர ஆய்வுக்கு பின்னரே, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: