Wednesday, June 7, 2017

pallikudam

சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றினார். அதை தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 27, 30, 31, பிப்ரவரி 1–ந்தேதிகளில் நடைபெற்றது.



அதன் பிறகு, மார்ச் 16–ந்தேதி சட்டசபை கூடியது. அன்று 2017–18–ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் மார்ச் 20–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு நிதி அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்ததைத் தொடர்ந்து, சட்டசபை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் முடிவுற்றதும் தொடர்ந்து அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுவது வழக்கம். ஆனால், மானியக் கோரிக்கை மீதான நிகழ்வுகள், சூழ்நிலை கருதி தள்ளிவைக்கப்பட்டது.

அந்த வகையில், ஏப்ரல் 10–ந்தேதி நடைபெறுவதாக இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை காரணம் காட்டி சட்டசபை கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, சட்டசபையை உடனே கூட்டவேண்டும் என்றும் குடிநீர் பிரச்சினை, வறட்சி, ‘நீட்’ தேர்வு, போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கவர்னர் உத்தரவு

இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் சட்டசபையின் கூட்டத்தொடரை முடித்து வைப்பதாக மே 11–ந்தேதி கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முடித்து வைத்து உத்தரவிடப்பட்டதால் மீண்டும் கவர்னர் புதிய உத்தரவு பிறப்பித்த பிறகுதான் சட்டசபையை கூட்ட முடியும்.

அந்தவகையில் நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவ் புதிய உத்தரவைப் பிறப்பித்தார். இதுகுறித்து சட்டசபை செயலாளர் (பொறுப்பு) கே.பூபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்திய அரசியல் சாசனத்தின் 174(1)ம் பிரிவின் கீழ், தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை வரும் 14–ந்தேதியன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

மானியக் கோரிக்கைக்கான கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நாளை (7–ந்தேதி) காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும். தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய எதிர்க்கட்சிகளும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும்.

அதைத் தொடர்ந்து, 14–ந்தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் எதுவரை நடக்கும் என்பதற்கான தேதிகள் அடங்கிய பட்டியல், அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்துக்குப் பின்னர் வெளியிடப்படும்.

வயிற்றில் புளி கரைப்பு

இந்த கூட்டத் தொடர், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டிக் கூட்டத்தொடராக அமையும். ஆளும் கட்சியான அ.தி.மு.க., எடப்பாடி கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் என உடைந்து பரிதாபமாக இருக்கும் நிலையில், நடத்தப்படும் கூட்டத்தொடர் இதுவாகும்.

அ.தி.மு.க.வில் எந்த எம்.எல்.ஏ. யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்பது புதிராக இருக்கும் நிலையில், ஜெயிலில் இருந்து வந்துள்ள டி.டி.வி.தினகரன் கூடுதலாக ஆளும் தரப்பினரின் வயிற்றில் புளியைக் கரைத்து இருக்கிறார்.

அவர் தரப்பில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், எடப்பாடி கே.பழனிசாமி தரப்பில் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் சபாநாயகர் தனபால் உள்பட 135 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சிதலைவி அம்மா அணியில் 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க. அம்மா அணியில் 123 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இதில் 11 பேர் தினகரனுக்கு ஆதரவு தெரிவிப்பது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. தி.மு.க.வுக்கு சாதகம்

இந்த சூழ்நிலையை தி.மு.க. தனக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடும். மொத்தமுள்ள 54 மானியக் கோரிக்கைகளில், ஒவ்வொரு துறையின் மானியக்கோரிக்கை மீதான எம்.எல்.ஏ.க்களின் விவாதம் முடிந்த பிறகு, அந்தத் துறைக்கு அரசு நிதி ஒதுக்கும் முடிவு, சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்படுவது வழக்கம்.

குரல் வாக்கெடுப்பின்படி மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. பெரும்பான்மை பலத்தில் அரசு இருக்கும்போது, ஆளும் கட்சித்தரப்பில் அதிக குரல் கேட்பதாகக் கூறி ஓட்டெடுப்பில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுவிட்டதாக சபாநாயகர் அறிவிப்பார். அதை எதிர்க்கட்சிகள் தடுப்பதில்லை. டிவி‌ஷன் ஓட்டெடுப்புக்கு வற்புறுத்துவார்கள்

ஆனால் தற்போது நிலை அப்படி இல்லை. டி.டி.வி.தினகரன் வெளியே வந்தபிறகு அரசின் பெரும்பான்மை பலம், சந்தேகத்துக்கு இடமானதாகிவிட்டது. எனவே, சட்டசபையில் குரல் ஓட்டெடுப்பை தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகள் எதிர்க்கும். அதோடு, எண்ணிக் கணிக்கும் முறையில் (டிவி‌ஷன்) ஓட்டெடுப்பை நடத்தவேண்டும் என்று பலமாக குரல் கொடுக்கும்.

இதை ஏற்காவிட்டால் சட்டசபையில் அமளியில் தி.மு.க. உள்பட மற்ற கட்சிகள் ஈடுபடக்கூடும். சட்டசபையில் வந்த எம்.எல்.ஏ.க்களை பிளாக் வாரியாகப் பிரித்து யார் யாரெல்லாம் ஆதரவு தெரிவிக்கின்றனர்?, யார்–யார் எதிர்க்கின்றனர்? என்பதை தனித்தனியாக எழுந்து நின்று தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற நிலையில் சட்டசபையில் எப்போதும் அமைதியை எதிர்ப்பார்க்க முடியாது. காரசார கூட்டத்தொடர்

மேலும், சட்டசபை கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தலில் அமல்படுத்தப்பட உள்ள எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு மசோதா, ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரிக்கான மசோதா, உள்ளாட்சி அமைப்பின் தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதா உள்பட பல்வேறு முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

அதோடு, மாட்டிறைச்சி விவகாரம், வறட்சி, குடிநீர் பிரச்சினை உள்பட சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் பற்றி எதிர்க்கட்சிகள் ஓங்கி குரல் கொடுக்கும். எனவே, மற்ற சட்டமன்ற கூட்டத் தொடர்களைவிட இந்த கூட்டத்தொடர் மிகுந்த காரசாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: