Friday, November 13, 2015

pallikudam

முகநூலில் அரசுக்கு எதிராக இயங்குபவரா- உங்களை குறித்த விவரம் தற்போது அரசின் கையில்
           உலகில் உள்ள பல்வேறு நாடுகள், முகநூலில் (பேஸ்புக்) தங்களுக்கு எதிராக இயங்குபவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என பேஸ்புக் நிர்வாகம் கூறியுள்ளது.

         இந்தியாவில் மட்டும், சட்டத்துக்குப் புறம்பான கருத்துகளை வெளியிட்டதாக இந்த ஆண்டில் 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்  நிறுவனத்தில் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்படும் ஆய்வறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் உள்ள அரசாங்கங்கள் கேட்கும் தகவல்கள் கடந்த ஆறு மாதத்தைவிட தற்போது 18 மடங்கு அதிகரித்துள்ளது. 2014 ஆண்டு பிந்தைய ஆறுமாதங்களில் 35,051 பேரின் தகவல்கள் கேட்கப்பட்ட நிலையில், நிகழ் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 41,214 பேரின் தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

அரசுகளின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, 20,568 ஆட்சபேகரமான கருத்துகள் பேஸ்புக் பக்கங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த 6 மாதத்தைவிட இரு மடங்காகும்.

மேலும் அரசுக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்யும் நபர்களின் அடிப்படை தகவல்கள், அவர்கள் பயன்படுத்தும் கணினி, மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் (IP address), அவர்கள் பதிவிடும் தகவல்களை தர வேண்டும் என்பது உலக அரசுகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

பேஸ்புக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 மி்ல்லியனை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்திடமிருந்துதான், தனிநபர்கள் குறித்த தகவல்கள் கேட்டு அதிகமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளிலிருந்து அதிக கோரிக்கைகள் வந்துள்ளன.

உள்ளூர் சட்ட விதிகளை மீறியதாகவும், தகவல்களை நீக்க வலியுறுத்தி இந்தியா மற்றும் துருக்கி நாடுகளிலிருந்து அதிக வேண்டுகோள்கள் வந்துள்ளன. 190 மில்லியன் இந்திய வாடிக்கையாளர்கள் பேஸ்புக்கில் உள்ள நிலையில், இந்த ஆண்டு மட்டும் இந்தியாவைச் சேர்ந்த 15,155 பேரின் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகமாகும்.

அரசாங்கங்கள் விடுக்கும் கோரிக்கையை தட்டிகழிக்க இயலாமல், தனிநபர் விவரங்கள் பாதுகாப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி, அவர்கள் குறித்த விவரங்களை அரசுகளுக்கு வழங்கி வருகிறது பேஸ்புக்.

எனினும், தனது வாடிக்கையாளர் விவரங்களை எந்த அரசும்  நேரிடையாக பயன்படுத்திகொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை என்று அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

No comments: