Monday, August 10, 2015

Pallikudam

ஏ.டி.எம்., கார்டில் ஆன்--லைன் மோசடி அரசு ஊழியர்களை குறி வைக்கும் கும்பல்
ஏ.டி.எம்.,கார்டு காலாவதி ஆகிவிட்டது,கார்டின் பின்புறம் உள்ள 'சி.வி.வி.' எண்ணை கூறுங்கள் என கேட்டு விட்டு, அதன் பிறகு போனில் வரும் 'ஓ.டி.பி.' எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டை கேட்டு ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் கும்பல் அரசு ஊழியர்களை குறிவைத்துள்ளது.வங்கியில் கணக்கு துவங்கி ஏ.டி.எம்., கார்டு பெறும்போது, கார்டை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய விபர குறிப்பும் சேர்ந்தே வரும்.
ஏ.டி.எம்., கார்டை மட்டும் எடுத்து பாக்கெட்டில் வைத்து அதன் பின்புறம் கையெழுத்து போட வேண்டும் என்பது கூட தெரியாமல் இன்னும் எண்ணற்றோர் உள்ளனர். வீட்டில் இருந்தபடியே பிறருக்கு பணத்தை அனுப்புவது, மின்கட்டணம் செலுத்துவது, மிகப்பெரிய கம்பெனிகளின் பொருட்களை வாங்குவது என அனைத்தும், நம் ஏ.டி.எம்., கார்டு மூலம் ஆன்-லைனில் நடக்கிறது.
ஆன்-லைனில் பொருட்களை வாங்கும்போது நம் கார்டின் எண்ணை பதிவேற்றம் செய்த பிறகு பின்புறம் உள்ள சி.வி.வி., (கார்டு வெரிபிகேஷன் வேல்யூ) எண்ணை கேட்கும். அதை கொடுத்தவுடன் நம்முடைய மொபைல் எண்ணுக்கு ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பாஸ்வேர்டு குறுஞ்செய்தியாக வரும். அந்த பாஸ்வேர்டு மூலம் நமக்கு தேவையான பொருளை தெரிவு செய்து தொகையை ஆன்-லைனிலேயே செலுத்தி வருகிறோம்.
சமீப காலமாக அடையாளம் தெரியாத மொபைல் எண் மூலம் பேசும் மர்ம நபர்கள், குறிப்பிட்ட வங்கியின் பெயரையும், கார்டுதாரரின் பெயரையும் கூறி, 'ஏ.டி.எம்., கார்டு காலாவதி ஆகிவிட்டது,' என கூறி முன்புறம் உள்ள கார்டின் நம்பரை கேட்கின்றனர். ஒரு சில ஏ.டி.எம்.களில் நம் கார்டுக்கு பணம் வந்திருக்காது. இதனால், கார்டின் நம்பரை கொடுக்கிறோம். அதன் பிறகு பின்புறம் உள்ள சி.வி.வி., எண்ணை கேட்டு, தொடர்ந்து வரும் பாஸ்வேர்டையும் கேட்டு பொருட்களை 'ஆன்-லைனில்' வாங்கி விடுகின்றனர்.
ஒரு சில வேளைகளில் பாஸ்வேர்டை பெற்று விட்டு “மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள்” என கூறி அந்த கால இடைவெளியில் ஆன்-லைனில் பொருட்களை வாங்கி மோசடி செய்கின்றனர். காரைக்குடி அரசு  அலுவலர் ஒருவரின் வங்கி கணக்கில், கடந்த மாதம் இதே போன்று பேசிய நபர்கள், ரூ.49 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனர்.
வங்கி மேலாளர் ஒருவர் கூறும்போது: வங்கி முன்பு ஏ.டி.எம்., கார்டு எண்ணை வழங்காதீர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். அதை யாரும் பார்ப்பது இல்லை. ஏ.டி.எம்.,கார்டு அனுப்பும் போதும் அதனுடன் விபர குறிப்பும் அனுப்புகிறோம் அதையும் வாசித்து பார்ப்பது இல்லை.படித்தவர்கள் இதில் ஏமாறுவது தான் ஆச்சரியமளிக்கிறது.
ஒடிசா,நொய்டா,குர்கான் உட்பட வட மாநிலத்தில் உள்ள பிரவுசிங் சென்டர் மூலம், இங்குள்ளவர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றுகின்றனர். ஆன்-லைனில் பொருட்களை வாங்கும் நிறுவனங்களை நாம் இணையத்தில் தேடி பார்த்து கடிதம் அனுப்பினாலும் அதில் பதில் இருப்பதில்லை. வாடிக்கையாளர்கள் தான் உஷாராக இருக்க வேண்டும், என்றார்.

No comments: