Sunday, February 22, 2015

Pallikudam

தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?

தமிழகத்தில் கணினி வழிக் கற்பித்தலை சிறப்பாக செய்து கொண்டிருக்கும் எனது ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம்.
என்னிடம் பலர் கேட்ட கேள்விகளுக்கு விடையினை அளிக்கிறேன். நான் விடையளிப்பது மற்ற ஆசிரியர்களை ஊக்கமூட்டுவதற்காக மட்டுமே!

1. தமிழக அளவில் சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருது அரசுப்பள்ளிக்கு எவ்வாறு கிடைத்தது?
எங்கள் பள்ளியில் அனைவரும் எதிர்பார்ப்பது போல் மிகப் பெரிய கணினி ஆய்வகமோ அனைத்து வகுப்புகளும் கணினி வழிக் கற்பித்தலுக்குரிய சாதனங்களும் இல்லை. கணினியே இல்லாத பள்ளிக்கு சிறந்த கணினி வழிக் கற்பித்தல் விருதா என எண்ண வேண்டாம். எங்களது பள்ளி 2010 ஆம் ஆண்டு RMSA ஆல் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளி, எனவே அங்கு கணினி ஆய்வகம் இல்லை. ஒரே ஒரு கணினி, பிரிண்டர்,ஸ்கேனர் தலைமையாசிரியர் அறையில் அலுவலகப் பயன்பாட்டிற்கு உள்ளது. அதுவும் ஊரில் உள்ள ஒருவரால் நன்கொடையாக வழங்கப்பட்டது. நான் எனது வகுப்பறைக்குச் செல்லும் போது தேசிய விருது பெற்றமைக்காக பியர்சன் நிறுவனத்தால் வழங்கப்பட்ட மடிக்கணினியை எடுத்துச் செல்வேன், மாணவர்களுக்காக டேப்லட் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை கற்பித்தல் பணிகாகப் பயன்படுத்துகிறேன். எனது செயல்பாடுகளை முகநூலில் கண்ட எனது நண்பர் பிரசன்னா என்னைப் பாராட்டி எனது பள்ளிக்காக புரெஜெக்டரை நன்கொடையாக அளித்தார். அதனால் அனைத்து மாணவர்களும் அனைத்து வகுப்புகளும் கணினி வழியாக கற்பிக்க எளிதாக முடிந்தது.
கணினி, புரெஜெக்டர், டேப்லட், ஆண்ட்ராய்ட் மொபைல் போன் ஆகியவை நான் கற்பித்தல் பணிக்காக பயன்படுத்துகிறேன். அவைகளை நான் பயன்படுத்தும் முறை
1.குறுந்தகடுகள் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல்
2. என்னால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பாடங்கள் மூலம் கற்பித்தல்
3. இரு வகுப்பறைகளை Skype, Google Hangout, ஆகியவற்றின் மூலம் இணைத்து கற்பித்தல்
4. இணைய தளம் மூலமாக கற்பித்தல்.
5. மற்ற திறமையான ஆசிரியர்களின் படைப்புகளை இணையம் மூலம் கற்பித்தல்.
6. டேப்லட் மூலம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் மூலம் கற்பித்தல்.
7. வாட்ஸப் மூலம் மாணவர்கள் திறமையை மற்ற வகுப்பறைக்குக் காட்டல்.
இன்னும் பல……….
2. பல விருதுகளை நீங்கள் மட்டுமே வாங்குகிறீர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு வழி காட்டலாமே?
எப்பொழுதும் ஆர்வமுள்ள ஆசிரியர்களை ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறேன்.15 ஆண்டுகளாக எங்கள் மாவட்டத்தில் கணினி சார்பாக பலர் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்கின்றனர். ஏன் எங்கள் மாவட்டத்தில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம், SSA வட்டார வளமையம் , மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம் ஆகியவற்றில் ஏற்படும் கணினி சார்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறேன். என்னால் ஊக்குவிக்கப்பட்ட மதுரை மாவட்டம், அரசு மேல்நிலைப்பள்ளி, அலங்காநல்லூர் உடற்கல்வி ஆசிரியர் திரு.காட்வின் ராஜ்குமார் அவர்கள் தேசிய அளவில் PEARSON NATIONAL AWARD- 2015 பெற்றுள்ளார். என்னால் ஊக்குவிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மேட்டுநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் திரு ஜான் அவர்கள் ICTACT – BEST TECHNO TEACHER AWARD 2015 பெற்றுள்ளார். இன்னும் பலர் உருவாகிக் கொண்டுள்ளனர்.

No comments: