Sunday, November 17, 2013

PallikudamNEWS

மழையர் பள்ளி ஆசிரியர் பணி மகத்தானது

                உலகில் பல்வேறு துறைகள் இருந்தாலும், ஆசிரியருக்கும், மருத்துவருக்கும் தனி கவுரவம் இருந்து வருகிறது. கற்பித்தல் பணியை செய்பவருக்கும், நோயைத் தடுத்து உயிரைக் காப்பவருக்கும் இருக்கும் மரியாதை அளப்பரியது. அந்த வகையில் ஆசிரியர் பணியில் மிகவும் மகத்தானது மழையர் பள்ளி ஆசிரியர் பணி.
                    ஒரு குழந்தை வளர்ந்து, படித்து, பட்டங்கள் பல பெற்றாலும், அதற்கு அடித்தளம் இடப்படுவது மழையர் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் தான். இதிலும், ஆரம்பப் பள்ளிக்கு முன்பாக பல குழந்தைகள் மழலையர் பள்ளியில் தான் தங்களின் கல்வியை துவக்குகின்றன. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மழையர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிவது என்பது எத்தனை மகத்தானது.
                     குழந்தைகள் வளர வளர சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு கல்வி கற்கத் துவங்குவர். ஆனால், மழலையாக இருக்கும் குழந்தைகள், பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றே அறியாத வயதில், மழையர் பள்ளிகளில் கால் வைக்கும் போது, அந்தக் குழந்தையை பள்ளிக்கூடம் வர வழைக்க வேண்டிய விருப்பத்தை ஏற்படுத்த வேண்டியதும், பள்ளியிலேயே வீட்டுச் சூழலை ஏற்படுத்தித் தர வேண்டியதும், மழலையர் பள்ளி ஆசிரியரின் முதன்மையான பணியாகும்.
                     அதன் பின்னர் அந்தக் குழந்தையின் மேம்பாட்டுக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து, எழுத்துக்களின், உச்சரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அந்தக் குழந்தையை ஆரம்பப் பள்ளிக்கு அனுப்பும் வரை, மழலையர் பள்ளி ஆசிரியரின் பங்களிப்பு தொடர்கிறது.
                    வீட்டில் இருக்கும் போது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் மட்டுமே பேசிப் பழகிய குழந்தைகள், மழலையர் பள்ளியில் தான், சக குழந்தைகளுடன் கலந்துரையாடலைத் தொடங்கும். அப்போது, அதற்கு தேவையான உரையாடல் பயிற்சியை சிறந்த முறையில் அளிக்க வேண்டியதும், மொழியை புரிய வைப்பதும் மழலையர் பள்ளி ஆசிரியரின் பிரதான கடமையாகும்
                    இத்தனை நுட்பமான பணியை செய்ய வேண்டிய மழலையர் பள்ளி ஆசிரியருக்கு, வளமான வேலைவாய்ப்பும் இருக்கிறது. அதுமட்டுமின்றி மழலைகளை வளர்த்து மாணவர்களாக உருவாக்கும் மன நிம்மதியும் கிடைக்கும். இந்தப் பணிக்கு மழலையர் ஆசிரியராக பயிற்சி பெறுவதுடன், மழலைகளை நேசிக்கவும், அவர்களை அனுசரித்துச் செல்லத் தேவையான பொறுமையும் இருக்க வேண்டியது முக்கிய அம்சம்.
                         இதேபோல், மழலையர் பள்ளி ஆசிரியருக்கு தேவைப்படும் மற்றொரு திறன், ஒவ்வொரு குழந்தையையும், தனித் தனியாக கவனித்துக் கொள்ளக் கூடிய திறமை. ஏனெனில், மழலைகள் ஒவ்வொன்றும், அவர்களுக்கென தனி உலகில் சஞ்சரிப்பவை. அவர்கள் அனைவரையும் ஒரே விதத்தில் நடத்தவோ, செயல்படவோ வைக்க முடியாது.
                    மழலையர் பள்ளி ஆசிரியராக விரும்புவர்கள், nursery teacher training படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கலாம் அல்லது IGNOU வழங்கும் Early Childhood and Care Education (ECCE) படிப்பையும் தேர்வு செய்யலாம்...
                                டெல்லியில் உள்ள National Academy of Teacher’s Training, Ramakrishna Teacher Training Institute மற்றும் டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மழலையர் பயிற்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.

No comments: