Sunday, November 24, 2013

PallikudamHSSEMIS

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு திட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.8 ஆயிரம் செலவு
பள்ளிக்கல்வித் துறையில் அரசு 16 வகையான இலவச திட்டங்களை செயல்படுத்துகிறது. இது போக மாணவர்கள் பற்றிய முழு விபரங்களை பதிவு செய்யும், தகவல் மேலாண்மை முறைமை (இஎம்ஐஎஸ்) திட்டத்தையும் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் விபரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த கார்டு மூலம் மாணவர் பற்றிய முழு விபரங்களையும் எளிதாக கண்டறிய முடியும

்.தற்போது, இந்த பணிகளுக்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் விபரங்கள் 30.9.12ம் தேதி அடிப்படையில் சேகரிக்கப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில் பதிவு செய்ய ஒரு மாணவருக்கு ரூ.15 வீதம் தலைமை ஆசிரியருக்கு செலவாகியுள்ளது. அதன்பின், மேலும் மாணவர்கள் விபரங்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு பள்ளிக்கும் குறுந்தகடு வழங்கப்பட்டு, 2 நாள் அவகாசத்தில் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான செலவையும் பள்ளி தலைமை ஆசிரியர்களே செய்தனர்.இந்நிலையில் 30.4.2013 நிலவரப்படி தகவல் தருமாறு கோரப்பட்டது.

மேலும், மாணவர்களின் புகைப்படமும், ஆதார் எண்ணும் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் ஒரு மாணவருக்கு மேலும் ரூ.20 என்ற வீதம் தலைமை ஆசிரியர்கள் செலவு செய்துள்ளனர்.இது தவிர ஆரம்பப்பள்ளிகளில் கடந்த ஆண்டு 5ம் வகுப்பும், நடுநிலைப்பள்ளிகளில் 8ம் வகுப்பும் முடித்த மாணவர்கள் உயர்கல்விக்காக வேறு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த வகை மாணவர்களின் புகைப்படத்தையும், ஆதார் எண்ணையும் சேகரிப்பதில் மிகுந்த நடைமுறை சிக்கல்களை தலைமை ஆசிரியர்கள் சந்தித்துள்ளனர். சேகரிப்பதற்கான கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன், செயலாளர் சுடலைமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.இந்த பணிகளை செய்வதற்கு கிராமப்பகுதியில் வசதி குறைவாக உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், புகைப்பட கலைஞர் மற்றும் கணினி படித்தவர்களை தேடி அலையும் நிலை உள்ளதால் கற்றல், கற்பித்தல் பணியும் பாதிக்கப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் புத்தகப்பை, புத்தகங்கள், காலணி, சீருடை போன்ற பெரிய இலவச திட்டங்களை கல்வித்துறை செயல்படுத்தும் போது அவற்றை பள்ளிகளுக்கு எடுத்து செல்வதற்கான வழிச் செலவினங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

No comments: