Thursday, October 22, 2015

pallikudam

TNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?...எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?

டெட் என்று ஒரு நாடகம் நடத்தி படித்தவர்களின் மனநிலையை கெடுக்கும் தமிழக அரசு, மேலும் படித்தவர்களின் மீது தொடுக்கப்படும் ஒரு கலியுக வன்கொடுமைதான் ஆசிரியர் தகுதித்தேர்வு என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நான் இவ்வாறு பேச எண்ணற்ற காரணங்கள் உண்டு அவற்றை பட்டியலிடுகிறேன்.

தமிழ்நாடு அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் .சில கேள்விகள்:
.
1. டி.இ.டி என்பதன் விளக்கம் தான் என்ன? அது தகுதி தேர்வு என்றால் வெறும் தகுதியாக மட்டும் கருதுவது தானே முறை.
.
2. SLET, NET, PGTRB, TNPSC Exam, Bank Exam, Railway Exam, அவ்வளவு ஏன் இந்திய அரசியல் அமைப்புகள் மிக முக்கிய தேர்வாக கருதப்படும் IAS தேர்விற்கும் கூட படிப்பு மற்றும் வயது சார்ந்த அடிப்படை தகுதிகளை அடுத்து தேர்வாளர்களுக்கு அந்தந்த துறையில் நடத்தப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் பணி வழங்கப்படுகிறது. டெட் தேர்வில் மட்டும் முரண்பாடு ஏன்?
.
3. டெட் தேர்வில் மட்டும் வெயிட்டேஜ் முறை கொண்டு வந்ததற்கான காரணம் என்ன? வெயிட்டேஜ் முறையில் எத்தனை முரண்பாடுகள் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை நிலவி வருகிறது.
.
4. இரண்டு முறை டெட் தேர்வுகள் நடைபெற்ற பின்பு திடீரென மதிப்பெண் சலுகை வழங்கியதற்காண காரணம் என்ன? சலுகை வழங்குவதாக இருந்தால் 2012 - ல் நடைபெற்ற டெட் தேர்விற்கும் சலுகை வழங்குவதுதானே முறை.
.
5. 2012 தேர்வு அறிவிக்கும்போதே சரியான வரைமுறை கொடுத்து தேர்வுகள் வைத்திருந்தால் பலரின் வாழ்வு பறிக்கப்படாமல் இருந்திருக்கும், 
எகா:- 2012 டெட் தேர்வில் 82 மதிப்பெண் முதல் தகுதி என்றால் அந்த ஆண்டு 82,83,84,85,86,87,89 மதிப்பெண் பெற்ற பல தேர்வர்கள் 18 மாதம் ஊதியம் பெற்று வாழ்வில் மதிக்கதக்க நிலை பெற்று இருப்பார்கள் அல்லவா? அவர்கள் மட்டும் பாவம் செய்தவர்களா?
.
6. 2012 தேர்விற்கு ஒரு வெயிட்டேஜ் முறை, 2013 தேர்விற்கு மற்றொரு வெயிட்டேஜ் முறை என்பதே முற்றிலும் தவறான ஒன்றாகவே தோன்றுகிறது.
.
7. 10 வருடங்களுக்கு முன் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்குவது மிகவும் தவறான ஒன்று. வெயிட்டேஜ் முறை ஆசிரியர் பணிக்கு படித்தவர்களை ஏமாற்றும் செயல். 1980 - களில் இருந்து 2014 ஆம் ஆண்டுகள் வரை கல்வி முறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் முறை போன்றவை ஒரே மாதிரியாக உள்ளதா? 1980 -ஆம் வருடங்களில் +2, கல்லூரி படிப்பும், 2000 ஆண்டிற்கு பின்பு உள்ள +2, கல்லூரி படிப்பும் ஒன்றுக்கொன்று நிகராணவையா? ஒரே மாதிரியானவையா? இதனை கேட்டால் தரமான ஆசிரியர்களை உருவாக்குவோம், என்று ஒரு போலித்தனமான பதில் கூறப்படுகிறது.
.
8. PG TRB -க்கும், +2 -விற்கு 10 மதிப்பெண், பி.எட்-க்கு 10 மதிப்பெண், UG க்கு 10 மதிப்பெண், PG க்கு 10 மதிப்பெண் என்றும் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணிற்கு 60 மதிப்பெண் என்று வெயிட்டேஜ் முறையை கடைபிடித்தால் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் தகுதியான மற்றும் தரமானவர்களாக இருப்பார்கள் அல்லவா? டெட் தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு?
.
9. முன்பு படித்த படிப்பிற்கு பணி வழங்குவது, 1. திருமணம் முடிந்து பல வருடங்கள் கழித்து ஒரு ஆண் ஏன் எனக்கு வரதட்சணை வழங்கவில்லை என்று கேட்டு கொடுமை செய்வது போல் இருக்கிறது. வரதட்சணை (வெயிட்டேஜ்) வாங்குவது குற்றம். 2. ஒருவன் பிறக்கும் போதே ஆசிரியராக பணி செய்ய வரம் பெற்று பிறந்திருக்க வேண்டும் என்று படித்தவர்களை பார்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்பதுபோல இருக்கிறது இந்த வெயிட்டேஜ் முறை. இது சரிதானா?
.
10. இளங்கலை பட்டம் முடித்து பி.எட் சேர்வதற்கு தேவையான குறைந்தபட்ச அடிப்படை மதிப்பெண்ணை அனைத்து பிரிவினருக்கும் குறைத்தது இன்றைய முதல்வர்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. இப்பொழுது அவற்றிற்கு வெயிட்டேஜ் முறை பின்பற்றுவது நியாயம் தானா?
.
11. என் டெட் மதிப்பெண் 93, +2 mark 747, UG மதிப்பெண் சதவீதம் 49.00% பி.எட் 75% டெட் வெயிட்டேஜ் 62.2%. தற்போது பணி பெற சற்றும் வாய்ப்பற்ற என்னை போன்ற பல பட்டதாரிகளின் நிலைதான் என்ன?
.
12. வெயிட்டேஜ் முறையால் +2, UG, மதிப்பெண் குறைவாக உள்ள என் போன்ற பட்டதாரிகள் என்றுமே ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா? மீண்டும் +2, இளங்கலை பட்ட மதிப்பெண்களை அதிகரிக்க வாய்ப்பு இல்லாத போது டெட் தேர்வில் பல மதிப்பெண் அதிகமாக பெற்றால்தான் வெயிட்டேஜ் மதிப்பெண் 1 அல்லது 2 கூடும், இப்படிப்பட்ட சூழலில் எத்தனை முறைதான் டெட் தேர்வு எழுதுவது?
.
13. டெட் தேர்வில் முதலில் குறிப்பிட்ட தகுதி (90 மதிப்பெண் மற்றும் அதற்குமேல்) மதிப்பெண் பெற்றும் வேலை வாய்பை இழந்த பலரின் நிலை பற்றி எந்த நீதிவான்களும் யோசிக்காமல் போனதன் காரணம் என்ன?
.
14. பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 10+2+3+1 என்ற வரிசை அமைப்பில் படித்தால் போதும் என்றுதான் நினைத்தோம், ஆனால் மீண்டும் மீண்டும் 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பலமுறை படிக்க வேண்டும் என்ற சட்டம் வந்துள்ளதை இப்போதுதான் பலர் உணர்கிறோம். இதுதான் கல்வியாளர்களின் சாதனையா?
.
15. இந்த டெட் தேர்வில் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எத்தனை ஆசிரியர்கள் தாங்கள் ஏற்கனவே செய்துகொண்டிருந்த வேலையை இழந்துள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியமும், தமிழக அரசும் அறியுமா? தேர்விற்கு முன்பே தெளிவான அறிவிப்பை வெளியிட்டிருந்தால் பல ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளுக்கு சென்றிருப்பார்கள் அல்லவா? இவர்களின் நிலைதான் என்ன? 2014-2015 ஆம் கல்விஆண்டு துவங்குவதற்கு முன்பாக பணி நியமனம் பற்றிய அறிவிப்பு விடாமல் இருந்தது பலரின் வாழ்வை அழித்துள்ளது.
.
16. மேலும் பலர் என்னை போன்று மேல்படிப்பை இழந்து இருக்க மாட்டார்கள், வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் PG, M.Phil சேர்க்கை தவிர்க்காமல் இருந்திருப்பார்கள், இதுபோன்றோரின் வாழ்விற்கு அரசால் பதில் கூற முடியுமா?
.
17. இந்த டெட் தேர்வால் பலரின் வாழ்வில் ஒளி வந்ததைவிட வயிறு பற்றி எரிந்ததுதான் அதிகம். இங்கே மனிதாபிமானம் காக்கப்படுகிறதா?
.
18. ஒவ்வொரு முறையும் எத்தனை புத்தங்களை தான் படிப்பது, ஒரு அறிவியல் அல்லது கணிதம் படித்த தேர்வர் எத்தனை புத்தகங்களை படிப்பது என்று இந்த அரசிற்கும், கல்வியாளர்களுக்கும் தெரியுமா? உளவியல் அடிப்படையில் படித்தால் ஒவ்வொரு மனிதனின் அறிவும், நுண்ணறிவும் 16 வயதில் நின்றுவிடும் என்பதை கல்வியாளர்கள் மறந்து விட்டார்களா?
.
19. மாணவர்கள் மனநிலையை ஆசிரியர் அறிய உளவியல் பாடத்திட்டம் உள்ளதை போல ஆசிரியர்களின் மனநிலையை அறிந்துகொள்ள அரசாங்கம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவற்றிற்கு ஏதாவது புதிய பாடத்திட்டம், புத்தகம் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. இதற்கு கல்வியாளர்களின் பதில் என்ன? 
.
20. இதன் மூலம் என்னை போல எத்தனைபேர் மன உலைச்சல் பெற்று வாழ்வை இழந்து வருந்துகிறார்கள் என்று தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்?
.
21. என்னைபோல பலருக்கு மனித உரிமை மீறலுக்கு அர்த்தம் இப்போதுதான் தெரிந்திருக்கும்.
.
22. மனித உரிமை மீறல் மற்றும் மன உலைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த தோன்றுகிறது. இதற்கு சட்டத்தில் இடம் உண்டா? 
********************************************************************************************
தமிழக அரசு, கல்வித்துறை, கல்வியாளர்கள், சமுக ஆர்வலர்கள் - இவர்களை கேட்கிறேன்.
.
1. ஒரு தேர்வின் மூலம் பணிவழங்குவதாக இருந்தால் அரசாங்கம் அதற்காண அறிவிப்பின்போதே காலிப்பணியிடங்கள், அதற்கான தகுதி, எதன் அடிப்படையில் தேர்வர்கள் பணிநியமிக்கப்படுவார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் அறிவித்த பின்னரே தேர்வை நடத்த வேண்டும் அல்லவா? அதை கடைப்பிடிப்பதுதான் சரியான முறையல்லவா? நடந்து முடிந்த தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்த பின்னர் சலுகை வழங்குவதும், தேர்வு செய்யும் முறையை மாற்றுவதும் சட்டப்படி சரிதானா?
.
2. தேர்வின் வினாக்களுக்கு விடையை வெளியிடுவதில்தான் எத்தனை சிக்கல், எத்தனை முறை மாற்றியமைத்தல் நடைபெறுகிறது, இதன் காரணம்தான் என்ன? வினா, விடை வழங்கிட அரசாங்கம் தேர்வுக்குழு அமைத்தும் ஏன் இத்தனை குழப்பம்? சரியான விடை எது என்று தேர்வு குழுவிற்கே தெரியவில்லை போலும், தேர்வர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னர்தான் தேர்வு குழு - வினாவிற்கான விடையை தெரிந்துகொள்கின்றன.
.
3. டெட் Syllabus பற்றி ஒரு கேள்வி :
டெட் தேர்வில் B.Sc Maths அல்லது B.Sc Physics படித்த தேர்வர் ஏன் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் உளவியல் படிக்க வேண்டும்? ஒவ்வொரு பள்ளியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என்று தனித்தனி ஆசிரியர்கள் எதற்கு நியமிக்கப்படுகிறார்;கள்? ஒரு ஆசிரியர் அனைத்தும் அறிந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கும் ஒரு கேள்வி எழுகிறது என் மனதில், அறிவியல் அல்லது கணிதம் படித்த ஆசிரியருக்கு சமூக அறிவியல் பற்றிய அறிவு இல்லாமல் இருந்தாலும் சரியா? முறையா? ஒரு தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லது வரலாறு படித்த ஆசிரியர் கணிதம், அறிவியல் சார்ந்த அறிவு இல்லாமல் இருந்தால் சரியா? முறையா? ஒரு ஆசிரியர் எல்லாம் தெரிந்து இருக்கவேண்டும் என்று சொல்லும் பொழுது அனைத்து பட்டதாரிகளும் டெட் தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என அனைத்து பாடங்களையும் படிப்பதுதானே மிகவும் சரி?
.
4. டெட் தேர்வை இவ்வாறு நடத்தும் அரசாங்கம் மேல் படிப்பு என்று சொல்லப்படும் B.Sc, M.Sc போன்ற பட்டப்படிப்புகளில் அனைத்து பாடங்களையும் பாடதிட்டமாக அமைக்க வேண்டும் அல்லவா?
.
5. டெட் தேர்விற்கு மட்டும் +2, UG போன்ற கல்விகளுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிட்டு பணி வழங்கும் முறையை கடைபிடிக்கும் அரசு PG, TRB,TNPSC போன்ற தேர்வுகளின் மூலம் வழங்கும் அனைத்து பணிகளுக்கும் இந்த முறையை கடைபிடிப்பதுதான் நியாயமான செயல் ஆகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வினால் பணியையும், வாழ்க்கையையும் இழந்து துடிக்கும் பலருக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும்.?

No comments: