Wednesday, July 16, 2014

News

▼எம்.பி.பி.எஸ்., இடத்திற்கான அனுமதி தாமதம்: 2 கட்ட கலந்தாய்வில் சிக்கல்
           காலக்கெடு நேற்றுடன் முடிந்தும், மூன்று மருத்துவ கல்லூரி இடங்களுக்கு முறையான அனுமதி இன்னும் கிடைக்காததால், எம்.பி.பி.எஸ்., இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

           தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கடந்த மாதம் நடந்தது. இதில், சுய நிதி கல்லூரிகளில், 498 இடங்கள் உட்பட, 2,521 இடங்களுக்கு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 'இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, இரண்டாம் வாரத்தில் நடக்கும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

240 இடங்கள்:

           திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரியில், 100 இடங்கள் மற்றும் திருச்சி -50, சேலம் - 25 என, மூன்று கல்லூரிகளிலும், 175 இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.,) அனுமதி தர வேண்டும். இதுதவிர, கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவக்கல்லூரியில், 65 இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கும். ஆனால், அனுமதிக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது. நேற்று மாலை வரை, எம்.சி.ஐ., அனுமதி கிடைக்கவில்லை. கோர்ட் விதிமுறைப்படி, இரண்டாம் கட்ட கலந்தாய்வை, இம்மாதம், 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். உரிய அனுமதி கிடைக்காததால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

            மருத்துவ கல்வி இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது: எம்.சி.ஐ., அனுமதிக்கான அவகாசம் நேற்று முடிந்தாலும், முறையான அனுமதி வரவில்லை. அனுமதி வரும் என்ற, வாய்மொழி தகவல்கள் உள்ளன. ஒரு நாள் தாமதம் ஆனாலும், அனுமதி இன்று கிடைத்து விடும் என, நம்புகிறோம். சுய நிதி கல்லூரிக்கான அனுமதிக் கடிதமும் கிடைக்கவில்லை. முறையான அனுமதி வராவிட்டால், அரசுடன் ஆலோசித்து, அடுத்த கட்ட முயற்சிகள் மேற்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments: