Friday, February 13, 2015

Pallikudam

ஆசிரியர் குறைவு ! : ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில்:
தொடக்க கல்வியில் அரசு மெத்தனம்
ஆதிதிராவிடர் நலத்துறையின், 25 தொடக்கப் பள்ளிகள், ஓராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வருகின்றன. பிற பள்ளிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 60 தொடக்கப் பள்ளிகள்; 15 நடுநிலைப் பள்ளிகள்; ஒன்பது மேல்நிலைப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள், இயங்கி வருகின்றன. இவற்றில், 25 தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாகவும்; ஏழு நடுநிலைப் பள்ளி கள், தலைமை ஆசிரியர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருகின்றன.

மாணவர் சேர்க்கை குறைவு
ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களின் கல்வி, தரம் குறைந்து வருகிறது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த கிராமவாசிகள், தங்கள் குழந்தைகளை இந்த பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து, தனியார் பள்ளிகளை நாடத் துவங்கி உள்ளனர். இதனால், இப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது.இந்த தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் உள்ளூர் ஆசிரியர்கள், பெற்றோரை சமாதானப்படுத்தி, தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டாம் என, அறிவுரை கூறி வருகின்றனர். எனினும், பொருளாதார நிலையில் கடுமையாக பின் தங்கியுள்ள குழந்தைகளே தற்போது, அதிக அளவில் இங்கு படித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் குறைந்தபட்ச வருவாய் உள்ள பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப துவங்கிவிட்டனர்.கடந்த ஐந்து ஆண்டுகளாகவே, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும், காலி பணியிடங்களை நிரப்ப, எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என, கூறப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப, ஆதிதிராவிடர் நல ஆசிரியர் சங்கம் போராடி வருகிறது.
ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளை பொறுத்தவரையில், மொத்தம், 210 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்; ஆனால், 140 ஆசிரியர்களே இருக்கின்றனர். நடுநிலைப் பள்ளிகளில், 15 தலைமை ஆசிரியர்களுக்கு, எட்டு பேர் தான் உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள், 270க்கு, 258 பேர் உள்ளனர்.
மூடு விழா
மாவட்டத்தில் அதிகபட்சமாக, மதுராந்தகம் தாலுகாவில் மட்டும், 15 ஓராசிரியர் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலை நீடித்தால், ஓராசிரியர் பள்ளிகள் விரைவில் மூடு விழா காணப்படும் என, ஆசிரியர் சிலர் கருதுகின்றனர். இருக்கின்ற பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் ஆறு தொடக்கப் பள்ளிகள் துவக்கப்பட்டதோடு, ஆறு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதை சுட்டி காட்டி, துறைச் செயலர் மற்றும் இயக்குனரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது; அரசு, செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனால், மாணவர்களின் தொடக்கக் கல்வி தரமாக அமையவில்லை எனில், அவர்களின் எதிர்காலம் இருண்டகாலமாகி விடும் என்ற கவலை அரசுக்கு இல்லை,'' என்றார்.
ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி ஒருவர் கூறுகையில், ''மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார். ஆசிரியர் பற்றாக்குறை குறித்து, ஆதிதிராவிடர் நல செயலர், இயக்குனருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம். வரும் கல்வியாண்டில், புதிய ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பதில் வந்துள்ளது. அதுவரை, மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க வேண்டாம் என, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றார்.
மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில், பல பள்ளிகளில் ஒரு ஆசிரியர்தான் பணியில் உள்ளார்.

Pallikudam

இணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி?
           இணையத்தின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் பயனாளர்களுக்கு(Internet Banking User) அதிர்ச்சி அளிக்கும் வகையில் க்ரைடக்ஸ் ட்ரோஜன் (Cridex Trojan) என்ற கம்ப்யூட்டர் வைரஸ் இண்டர்நெட்டில் வேகமாக பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

            ட்ரோஜன்(Trojan) வகையைச் சார்ந்த இந்த கம்ப்யூட்டர் வைரஸ் இணைய வங்கி பயனாளர்களின் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை திருடிவிடும் அபாயம் உள்ளதாக இ-பேங்கிங் அட்வைஸரி ஏஜென்ஸியான Computer Emergency Response Team of India (Cert-In) தெரிவித்துள்ளது.

பென்டிரைவ் போன்ற ரிமூவபிள் டிவைஸ்கள் மூலம் வேகமாக பரவும் இந்த வைரஸ் பயனாளர்களின் கணக்கு ரகசியங்களை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள்  மூலமாக திருடிவிடுமாம்.

இந்த வைரஸை தடுக்க என்னதான் வழி : 

இது போன்ற வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரில் உட்புகுவதை தடுக்க பயர்வால்(Firewall)-ஐ Gateway Level-க்கு Enable செய்து வைத்திருக்க வேண்டும்.

நம் கம்ப்யூட்டரில் உள்ள ஓ.எஸ். patches மற்றும் fixes-களை ரெகுலராக அப்பேட் செய்ய வேண்டும். அதேபோல், ஆன்டி-வைரஸ்(Anti-Virus) மற்றும் ஆன்டி-ஸ்பைவேர் (Anti-Spyware signatures)-களையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும்.

இணைய வங்கி கணக்கிற்கு கடினமான பாஸ்வேர்டுகளை பயன்படுத்த வேண்டும்.

மின்னஞ்சல்களில்(E-Mail) வரும் அட்டாச்மெண்ட்களை ஓப்பன் செய்யும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தேவையற்ற அல்லது தெரியாத சாப்ட்வேர்களை டவுண்லோடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

மேற்கண்ட செயல்முறைகளின் மூலம் 'க்ரைடக்ஸ் ட்ரோஜன்' வைரஸ்கள் நமது கணினியை தாக்கமால் பாதுகாக்கலாம்.

Pallikudam

பணி நியமன முதல் கால முறை ஊதியம்; அரசாணையை எதிர்நோக்கியுள்ள ஆசிரியர்கள்

         பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கும் அரசாணை தொடர்பான அறிவிப்பு, மாநில பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில், 50 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ளனர்.

             கடந்த, 2003 முதல் 2006 வரை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 40 ஆயிரம் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், பதிவு மூப்பு மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், 10 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்கள் என, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாதம், 3,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,000 ரூபாய், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 4,500 ரூபாய் என, தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வந்த அவர்களை, கடந்த, 2006, ஜூன் 1ம் தேதி முதல் காலமுறை ஊதியம் வழங்கி ஆணை பிறப்பித்தது.

இருப்பினும், தங்களது பணி நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் கேட்டு, ஆசிரியர்கள் போராடி வந்தனர்; அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.கடந்த, 2012, பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டசபையில் இதுதொடர்பான கேள்வி எழுந்த போது, அரசு பரிசீலனை செய்து வருகிறது என, பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். எனவே, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், 50 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் பணி நியமன நாள் முதல், கால முறை ஊதியம் வழங்கி, அரசாணை பிறப்பிக்கும் உத்தரவை வெளியிட வேண்டும் என ஆசிரியர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட சங்கங்கள்  எதிர்பார்க்கின்றனர்.

Pallikudam

வாசித்தல் திறன் 2ம் கட்ட ஆய்வு
                அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களின் "வாசித்தல் மற்றும் எழுதுதல்' திறன் குறித்த 2ம் கட்ட ஆய்வு, நடைபெற்று வருகிறது.

            வாசித்தல் மற்றும் எழுதுதல் திறனை மேம்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு எளிமையான முறையில் கற்றல் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய செயல்பாடுகளால், அவர்கள் இடையே ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை கண்டறிவதற்கு, ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது; அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர் பயிற்றுனர்களின் மூலம், ஆய்வும் நடத்தப்படுகிறது.அதன்படி, திருப்பூர் மாவட்ட அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 890 துவக்கப்பள்ளி, 293 நடுநிலைப்பள்ளி, 93 உயர்நிலைப்பள்ளி, 96 மேல்நிலைப்பள்ளிகளில், லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.ஆங்கிலம், தமிழ் மற்றும் கணிதப்பாடங்களில், 2 முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியரின் வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் குறித்து, 2ம் கட்ட ஆய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆக., மற்றும் செப்., மாதங்களில், முதற்கட்ட ஆய்வு நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வு நடத்தி, "ஏ', "பி', "சி', "டி' கிரேடு மதிப்பீடுகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, மீண்டும் தற்போது ஆய்வு நடக்கிறது. இவ்விரு ஆய்வு மதிப்பீடுகளை கொண்டு, மாணவர்களின் திறன் அளவிடப்படுகிறது. முதற்கட்ட ஆய்வில், ஆங்கிலத்தில் மாணவர்களின் செயல்பாடுகள் குறைவாக இருந்தன,' என்றனர்.

Pallikudam

GPF / TPF மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா???
           அரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும்.

        12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.

Tuesday, February 10, 2015

பள்ளிகூடம்

சொத்து வாங்க துறை தலைவரிடம் ஒப்படைக்க வேண்டிய படிவம்


Monday, February 9, 2015

Pallikudam

பி.எப்., திட்டத்தில் மாற்றங்கள் வருகிறது!
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் கூடுதல் தொழிலாளர்களை கொண்டு வரும் வகையிலும், தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கூடுதல் பண பலன்கள் அளிக்க வகை செய்யவும், வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான மசோதா, வரும் பட்ஜெட்

கூட்டத் தொடரில், பார்லிமென்டில் அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் துறைகளில் மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தில், 12 சதவீதத்தை, தங்களின் வருங்கால வைப்பு நிதியத்திற்காக வழங்குகின்றனர். அது போல, அந்த தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களும், 12 சதவீதத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்குகின்றன. நிறுவனங்கள் வழங்கும், 12 சதவீத நிதியில், 8.33 சதவீதம், புதிய பென்ஷன் திட்டத்திற்காகவும், மீதமுள்ள, 3.67 சதவீத நிதி வைப்பு நிதிக்கும் வழங்கப்படுகிறது.

தொழிலாளர் பணியிலிருந்து ஓய்வுபெறும் போது, அவர் சேர்த்த வைப்பு நிதி, அவருக்கு வழங்கப்படுகிறது.இந்த உன்னத திட்டம், பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், முந்தைய சட்ட திட்டங்களுடன் செயல்பட்டு வந்தது.கடந்த ஆண்டு மே மாதம், பிரதமராக மோடி பொறுப்பேற்றதும், தொழிலாளர் நலச் சட்டங்கள் பல மாற்றியமைக்கப்பட்டன; அப்போது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டன.

அதில், முக்கியமான திருத்தங்களாவன:

* ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு தொழிலாளர் மாறினாலும், அவரின் வருங்கால வைப்பு நிதியை ரத்து செய்யாமல், கணக்கை மட்டும் மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.பி.எப்., போர்ட்டபிலிட்டி என்ற இந்த முறையில், 'யுனிவர்சன் அக்கவுன்ட் நம்பர்' என்ற, யு.ஏ.என்., வழங்கப்படும். அந்த தொழிலாளி, எந்த நிறுவனத்திற்கு மாறினாலும் அவரின் கணக்கில் நிதி சேர்க்கப்படும்.இவ்வாறு, நான்கு கோடி தொழிலாளர்களுக்கு, யு.ஏ.என்., வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* நம்பர் போர்ட்டபிலிட்டி திட்டப்படி, சந்தாதாரரான தொழிலாளர் பணியாற்றும் நிறுவனங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டு, அந்த கணக்குடன், தொழிலாளர்களின், யு.ஏ.என்., சேர்க்கப்பட உள்ளது.

* சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சம், 6,500 ரூபாய் மாத சம்பளம் பெறுபவர்கள் மட்டும் தான், பி.எப்., திட்டத்தில் கட்டாயம் சேர வேண்டும். அதற்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என இருந்ததை, 15,000 ரூபாய் என மாற்றியமைத்துள்ளது மத்திய அரசு.இதனால், கூடுதலாக, 50 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

* தொழிலாளர் இறந்தால், அவர் குடும்பத்திற்கு மிகக் குறைவான தொகையே பென்ஷனாக வழங்கப்பட்டு வந்த நிலையில், குறைந்தபட்ச பென்ஷன் தொகை, 1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 28 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.

* தொழிலாளர் டிபாசிட்டுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டத்தில், 1.56 லட்ச ரூபாயாக இருந்த காப்பீடு தொகை, 3.6 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

* வருங்கால வைப்பு நிதியிலிருந்து, ஐந்தாண்டுகளுக்குள் பணத்தை எடுத்தால் வரி விதிக்கப்பட்டிருந்தது; மாற்றியமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இன்னமும், பல சீர்திருத்தங்களுக்கு மசோதா தயாராகி வருவதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிறது மாற்றங்கள் :

மத்திய, வருங்கால வைப்பு நிதியத்தின் கூடுதல் கமிஷனர் ராஜேஷ் பன்சால் கூறியதாவது: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டங்களில் பல மாற்றங்களை மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, மசோதா தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெறுகிறது. இதன் மூலம், கூடுதல் தொழிலாளர்களுக்கு நன்மை, கூடுதல் தொழிலாளர்களை, வருங்கால வைப்பு நிதி வளையத்திற்குள் கொண்டு வருவது போன்றவை சாத்தியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

என்ன மாற்றங்கள் எதிர்பார்க்கலாம்?

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில், குறைந்தபட்சம், 20 பேர் பணியாற்ற வேண்டும் என விதிமுறை உள்ளது. அது, 10 ஆக குறைக்கப்பட உள்ளது.இதன் மூலம், சிறிய தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வரம்புக்குள் வருவர். அவர்களுக்கு, சமூக, பணி பாதுகாப்பு கிடைக்கும்.

* சம்பளத்தில் மாதம் தோறும், 12 சதவீதத்தை கட்டாயம் வருங்கால வைப்பு நிதிக்கு வழங்க வேண்டும் என இருப்பதை, சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்காக தளர்த்துவது என்பது மத்திய அரசின் விருப்பமாக உள்ளது.குறைந்த சம்பளம் பெறுபவர்கள், தங்கள் விருப்பப்படி, வருங்கால வைப்பு நிதிக்கு பணத்தை சேர்க்கலாம் என, விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட உள்ளது.

அடேங்கப்பா....!தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், ஐந்து கோடி சந்தாதாரர்கள் அல்லது உறுப்பினர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், 70 ஆயிரம் கோடி ரூபாய், இந்த நிதியத்தில் சேருகிறது. இந்த நிதியம், 6.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடாக கொண்டுள்ளது.

Pallikudam

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி
தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்து 173 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்; 28.4 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும், ஆண்டு தோறும் மாணவர் சேர்க்கை சரிந்துகொண்டே வருகிறது. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008--09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 லட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58 லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 லட்சமாக குறைந்துள்ளது. கடந்த இரு கல்வியாண்டுகளில், மாணவர் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.
அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருகிறது. கடந்த, 2008-09ல் 34.5 லட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறை வால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின்படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக 2000 பள்ளிகளை, அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கான ஆலோசனையில் கல்வி அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

Saturday, February 7, 2015

Pallikudam

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய கோரி மாபெரும் கவனஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

Wednesday, February 4, 2015

Pallikudam

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு;
இனி தனித்த போராட்டம் இல்லை
டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் உட்பட ஏனைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து 22.02.2015ல் மாவட்ட அளவில் ஆயுத்தக்கூட்டம் நடத்தவும், 08.03.2015ல் மாவட்ட அளவில் கண்டன பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pallikudam

பள்ளி முடிந்ததும் பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது:
      பள்ளிக்கல்வி இயக்குனரகம்
மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும், பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் எடுத்து வருதல் கூடாது என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, மொளசூர் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன் மாயமாகி, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில், பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன.

விசாரணையில், உடன் படித்த தோழியே, சசிரேகாவை நகைக்காக கிணற்றில் தள்ளி கொன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, மாணவ, மாணவியர் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் வாயிலாக, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

* பள்ளி மாணவ, மாணவியர் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும்போதும், மீண்டும் வீடு திரும்பும் போதும், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

* விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் போன்ற உபகரணங்களை எடுத்து வரக்கூடாது.

* வீட்டில் இருந்து பள்ளிக்கு தனியாக வருவதை தவிர்த்து, குழுவாக இணைந்து வர வேண்டும்.

* பள்ளிக்கு வரும் வழியில், நீர்நிலைகள் இருந்தால், அதனருகில் செல்லக்கூடாது.

* ரயில்வே பாதை, நெடுஞ்சாலை இருப்பின் கவனமாக, எச்சரிக்கையுடன் கடக்க வேண்டும். ரயில், பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்க கூடாது.

* பள்ளிக்கு வரும் வழியில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசக் கூடாது; அவர்கள் தரும் உணவு பொருட்களை வாங்கக் கூடாது.

* பள்ளி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த அறிவுரைகளை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Pallikudam

பள்ளிக்கூடங்களில் 1 முதல் 12–ம் வகுப்பு வரை நீதிபோதனையை கட்டாய பாடமாக்க கோரி வழக்கு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு
நீதிபோதனையை கட்டாய பாடமாக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு மத்திய அரசு, மத்திய கல்வி வாரியம் ஆகியவற்றுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த பெண் வக்கீல் சந்தோஷ் சிங் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறி இருந்தாவது:–
ஒரே குறிக்கோள் பணம்தான்
தற்போது, இந்த சமூகத்தின் நெறிமுறைகள் மீதான மதிப்பு வேகமாக குறைந்து வருகிறது. எப்படியாவது பணம் சம்பாதிக்கவேண்டும் என்பது மட்டுமே மனிதர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது.
இது போன்ற சிந்தனைகளின் அழுத்தத்தில் சமூகம் சிக்கி சீரழிந்துவிடாமல் இருப்பதற்கும், உலகத் தர மதிப்புடன் கூடிய பிரஜைகள் நாட்டில் உருவாகவும், மாணவப் பருவத்திலேயே ஆன்மிக நெறிகளுடன் கூடிய நீதிபோதனை கல்வி மாணவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.
கட்டாய பாடமாக்கவேண்டும்
எனவே பள்ளிக்கல்வியில் 1–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை நீதிபோதனையை கட்டாய பாடமாக சேர்க்கும்படி கோர்ட்டு உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Thursday, January 29, 2015

pallikudam

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி நாளை 30/01/2015 எடுக்க வேண்டும் - செயலாளர் திருமதி.சபீதா அவர்கள் உத்தரவு